வெள்ளி, 2 ஜனவரி, 2009

தலைபே இல்லாத ஒரு கவிதை






ஏனோ தெரியவில்லை...!
ஏதாவது எழுதவேண்டும்
போல் இருந்தது.

கண்ணை மூடிச்
சிந்தித்தேன்...!
விண்ணைக் கூர்ந்தும்
சிந்திதேன்...!
என்னைக் கொண்டு
முடியுமான வரை
எண்ணிப்பார்த்தேன்...!

கார் இருட்டில்
ஊசி தேடுவதைப் போல...
நார் உரிக்க
கல்லை எடுத்தது போல...
ஏர் எடுத்த
முடவன் போல...

வார்த்தை வர
மறுத்தே தொலைத்தது...!
காற்றைக்கேட்டேன்
உதவி நில்லென்று...!
பார்த்துச் சிரித்து
ஏளனம் செய்தது...!

எங்கே போவேன்
வார்த்தை தேடி
எங்கே கிடைக்கும்
நற்றமிழ் பள்ளி
இங்கே வாழ்ந்தால்
இருப்பதும் மறக்கும்

வேண்டும் எனக்கோர்
மணித்திரு நாடு
ஆண்டும் அவையும்
தமிழே செய்யனும்..!
வாண்டும் வாழையும்
தமிழே பாடனும்...!

என்று நிறைவுறும்
நான் காணு சொற்பனம்..???
இன்றே உரைத்திடு
உறுதியாய் உரைத்திடு...!!!

திங்கள், 15 டிசம்பர், 2008

நாளைய வேள்விகள்

நாம்...!
நேற்றைய செவ்வயல்களில்
தோற்றிய வீரப்புற்கள்

நாளைய வேள்விக்காய்
இன்றே மரணிக்கும்
தருப்பைப் புற்கள்...!

நாளைய வேள்வியின்
சுதந்திர யோதிக்காய்
இன்றே சாம்பராகும்
தன்மானப் புற்கள்...!

இறுதி வேரின்
உறுதித் துகள்
உள்ளவரை
பல பிறவி எடுத்து
நாளைய வேள்வியின்
நாமுமோர் அங்கமாவோம்...!

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

நீர்த்திவலையும் தாமரையிலையும்...!

தாமரை இலையின்
நீர்த் திவலை...!
எத்தனை முறை தான்
நீர் நினைத்தாலும்
ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்;
நீர் பலமுறை சினந்திருக்கின்றது
இலைக்கு புரியவில்லையே என்று...!

பாவம் இலை...!
அதனால் என்ன செய்யமுடியும்
அதன் நெஞ்சுக்குள்ளும்
ஈரமுண்டு...
அதைவிட அதிகமாய்
வலிகளும் நிறையவே உண்டு
தடாக நீருக்கும்
நீர்த் திவலைக்குமிடையே
தடுமாறுகின்றது - இலை

எத்தனை முறைதான்
நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள
நினைத்தாலும்...
அதன் ஸ்பரிசத்தை
மட்டுமே இலையால்
கைது செய்ய முடிகின்றது.

இலை அழுதகண்ணீரில் தான்
தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது
எத்தனை பூக்களுக்குத் தெரியும்

இருந்தாலும் என்ன...
நீர் இருக்கும் வரை
அதனைத் தன்மீது
தாங்கி...
பழகமட்டுமே முடியும்
இலையினால்...!

கவிதையின் பிறப்புக்காரணம்

புயல்கள் நிலைகொண்டாலே
தவிர...
தென்றலாக இருந்தால்
காற்றின் பிறப்புக்காரணம்
அறிய முயல்வதில்லை நாம்...!

அப்படித்தான்... கவிதைகளும்
அடுத்தவரை சாடாதவரைக்கும்
பிறப்புக்காரணம்
கவிஞனுக்கு மட்டுமே புரிந்த
இரகசியம்...!

சனி, 13 டிசம்பர், 2008

நீ.... நான்.... அது....!

நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று...!

ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்...!

ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது....!

ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்...!

அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை

நீ....
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்...!

நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி...
எனக்கில்லை...!

இருந்தாலும்...
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது....!

கடலைப் பார்த்திருப்பய்...!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்

அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்...

கரைகடந்த
அலை - ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.

சிறு தென்றலாய்....
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு - அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல...!

ஆக...,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே...?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?

நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது...
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்...!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்....!

கார்த்திகை விளக்கீடு

என்று சொந்த ஊரைவிட்டு புறப்பட்டோமோ அன்றே உணர்விளக்கத் தொடங்கிவிட்டன
எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு
ஒன்றும்விதிவிலக்கல்ல.

நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள்
கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே
வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும்.
குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி
ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம்.

நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு
சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து
குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னும் இருக்கு.

பந்தம் சுற்றும் கதை இப்படி என்றால், வாழைத்தார் வெட்டும் படலம் இன்னும்
சுவாரசியமானது. பின்னேரம் ஆவதற்குள் படலை வாசலில் வாழை நட்டு, யார் வீட்டு
வாழைத்தண்டு பருமன் கூடியது எண்டு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

சூரியன் மறையும் வரை காத்திருந்து, சுவாமி அறைக்கு ஒண்டு, குசினிக்கு
ஒண்டு, அம்மி, ஆட்டுக்கல்லுக்கு ஒண்டு, கிணதடிக்கு ஒண்டு,
மாட்டுக்கொட்டிலுக்கு ஒண்டு, குப்பை மேட்டுக்கு ஒண்டு, என்று எல்லா இடமும்
பந்தம் கொழுத்தி வைத்துவிட்டு, படலையிலே இருக்கும் வாழைத் தாரில்
பாதித்தேங்காயில் சிறிது தேங்காய் எண்ணை விட்டு, சீலைத்துணி போட்டு அதைக்
கொழுத்தி அழகு பார்த்தோமே....!

எங்கட வீட்டு தேங்காய் எரிஞ்சு முடிய வெளிக்கிடுவம். ஊர் சுத்த.... ஒராள்
ரண்டு பேர் போரில்ல. எப்பிடியும் குறைஞ்சது 8, 10 பேர் இருப்பம். பறாளாய்
ரோட்டில தொடங்கி, காழுவன் சந்தி போய் அப்பிடியே பானாவெட்டி
ஆஸ்பத்திரிக்கு முன்னால இருக்கிர குச்சொழுங்கைகால திரும்பி, வடக்கம்பரை
வரைக்கும் போய் ஒரு collection போடுவம். அது ஒரு
தனிவேட்டைதான். collection என்டோன்ன காசு என்டு நினைக்காதேங்கோ...!
7.30,... 8.00 மணிக்கு வெளிக்கிட்டா எல்லட்ட வீட்டிலயும் தேங்காய் கணக்கா
நெருப்பில வேகி மணம் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்த தேங்காய் சுடுரத தான்
சொன்னனான்.

ஒவ்வொருவரும் turn வச்சு, ஆளில்லாத வீட்டு தேங்காய்களை சுட்டுடுவம்ஒரு
தெருவில சுட்டு அடுத்த தெருவுக்கு போறதுக்குள்ள எல்லாருக்கும் பிரிச்சு
குடுத்து சாப்பிட்டு முடிச்சிடுவம். சுடச்சுட தேத்தண்ணி குடிக்க தெரியாத
நான் அந்த வயசில எப்படியாவது அடுத்த ஒழுங்கைக்க போறதுக்கு முதல்
சாப்பிடவேணும் எண்டு சாப்பிட்டு கிடைச்ச experience சை வச்சு தான் பிறகு
வீட்டில சுடச் சுட தேத்தண்ணி குடிக்க தொடங்கினனான் என்டா பாருங்கவன்.
எவ்வளவு வேகமா தேங்கா சாப்பிட்டு இருப்பம் எண்டு. தேங்க்க எடுக்க போய்
வீட்டுக்காறறிட்ட மாட்டுப்பட்ட கதையும் இருக்கு. ஒருக்கா இப்பிடித்தான்
ஒரு கூட்டாளிப்பெடியன் வீட்ட தேங்கா எடுக்க போய் அவன்ட அப்பர் பாத்து
கத்த, பானாவெட்டிக்கு முன்னால ஓடவெளிக்கிட்டனாங்கள் ஐக்கியசங்க பள்ளிக்குட
குச்சுக்க போய்தான் திரும்பி பாத்தனாங்கள்.

ம்ஹ்...., எல்லாம் இப்ப நினைச்சு பாக்க மட்டும் தான் முடியுது....! இப்ப
இங்க யார் வாழை வச்சு விளக்கு கொழுத்தினம். எங்களுக்கு கிடைச்ச இந்த
அருமையான அனுபவம் எல்லாம் எங்கட பிள்ளைகளுக்கு கிடைக்கும் எண்டு நான்
நினைக்கேல்ல...! இருந்தாலும் ஒரு நப்பாச. திரும்பவும், எங்களுக்கு நாடு
கிடைச்சு மறுபடியும் ஊரில போய் வாழ கிடைச்சா கண்டிப்பா என்டை
பிள்ளைகளையும் கூட்டிட்டு தேங்காய் எடுக்க போவன்....!

திங்கள், 1 டிசம்பர், 2008

ஓயாது எங்கள் கரம்...

மருந்தாக நின்றவர்
வெளியேறிச் சென்றாலும்...
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்...!

தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை....
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்...!

கொண்ட கொள்கை
வென்றெடுத்து...
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்...!